Tuesday, July 29, 2025

விடியும் போது விடியட்டும்

விடியும் போது விடியட்டும் என்று

விதியை எண்ணி கிடப்பவனே

விழிகள் இரண்டும் திறந்து கிடந்தும்

வழிகள் தவறி நடப்பது ஏன்


மானினங்கள் புலிகளுக்கஞ்சும்

மயிலனங்கள் நரிகளுக்கஞ்சும் மனிதன் மட்டும் மனிதனுக்கஞ்சும்

நிலை ஏனடா

மண்டியிட்டு இறைவனை கெஞ்சும்

வேதம் கோடி ஏந்திய நெஞ்சும் 

வானம்பாடி இனங்களுக்கு இங்கே

கிடையாதடா

ஈரும் பேனும் வாழும் ஓட்டில்

ஈசன் எழுத்து இருக்கிறது என்று

ஏய்ச்சு பிழைக்கும் எத்தர்களாலே

ஏழ்மைக்கு என்ன தீர்வினை கண்டாய்

   - விடியும் போது


நாட்டு நடப்பு நன்மை தீமை

நாளும் சொல்லும் செய்தி தாளில்

ராசி பலனை தேடுவதேனோ

என் என் நண்பனே

கூட்டு சிறையின் கிளிகள் தந்த

ஏட்டு சுவடி படிப்பதனாலே

வாழ்க்கை உனக்கு வசப்படுமோடா

என்றென்றுமே

கருப்பு பூனை குறுக்கே வந்தால்

நடப்பு தவறு என்று நினைப்பாய்

அடுப்பில் பூனை தூங்கக் கண்டால்

அதற்கும் சிவனை நொந்து சிரிப்பாய்

  - விடியும் போது 


சுட்ட பின்னும் சுடு நெருப்பாலே

சுட்டுக் கொள்ளும் சூட்சுமம் கண்டு

சூளையிட்ட செங்கல் ஆனாய் உன் வாழ்விலே

வெற்றி பெற்ற மனிதருக்கெல்லாம்

பக்கத்துணை ஜோசியமல்ல

பட்டதுக்கு பலனை கண்டார் உழைப்பின் பேரிலே

ஒன்றுபட்டு உழைத்தோர் எல்லாம்

குன்றி லிட்ட விளக்காய் ஆனார்

மாண்புமிக்க தத்துவம் கண்டு

மனித வாழ்வின் சாட்சிகள் ஆனார்

  - விடியும்போது


எழுத்து, இசை

இ மு வெற்றிவளவன்


No comments:

Post a Comment